ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த முயன்றது பிழையல்ல என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன.
கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.
இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கங்குலி கூறியதாவது:
ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த முயன்றது பிழையல்ல. இந்த முடிவை எடுத்தபோது கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. இங்கிலாந்து தொடரை வெற்றிகரமாக நடத்தினோம்.
ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பிப்ரவரியில் இந்தியாவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒன்றும் இல்லாமல் இருந்தது. கடந்த மூன்று வாரத்தில் மிகவும் உயர்ந்துவிட்டது. கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு யாரும் வெளியேறவில்லை. எனினும் பல வீரர்கள் எதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள் எனக் கூறுவது கடினமானது என்றார்.