ஐபிஎல் இறுதிப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.
2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி துபையில் இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துக்கின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ், டூபிளெஸிஸ் ஆகியோர் களமிறங்கினர்.
ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி பின்னர் அதிரடியில் இறங்கியது. இருப்பினும், ருதுராஜ் 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ராபின் உத்தப்பா டூபிளெஸியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆரம்ப முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் சென்னை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூபிளெஸிஸ் சிக்ஸர் அடித்து அரைசதம் கடந்தார்.
ராபின் உத்தப்பா 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து மொயின் அலி களம் கண்டார். அவரும் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. அரைசதம் கடந்த டூபிளெஸிஸ் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர், 59 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தா அணியில் சுனில் நரேன் 2, ஷிவம் மவி 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.