மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 5வது தோல்வியை மும்பை சந்தித்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.
முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால், தவான் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் கடந்தத நிலையில், தவான் 50 பந்துகளில் 70 ரன்களைச் சேர்த்தார். மயங்க் அகர்வால் 32 பந்துகளில் 52 ரன்களைக் குவித்தார்.
அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஜிதேஷ் சர்மா 15 பந்துகளில் 30 ரன்களையும், ஷாருக்கான் 6 பந்துகளில் 15 ரன்களையும் சேர்த்தனர்.
முடிவில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி விரர்கள் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா 28 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அதற்கடுத்து வந்த டிவால்ட் பிரேவிஸ் அதிரடியாக ஆடினார்.
பிரேவிஸ் 25 பந்துகளில் 49 ரன்களைக் குவித்தார். திலக் வர்மா 36 ரன்களைச் சேர்த்தார். அதனைத்தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 43 ரன்கள் எடுத்து நம்பிக்கையளித்தார். எனினும் அதற்கடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் மும்பை அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை தனது 5வது ஆட்டத்திலும் தோல்வியடைந்துள்ளது.