குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 134 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் போட்டியின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ருதுராஜ் கான்வே இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் கான்வே 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி 17 பந்துகளில் 21 ரன்களை சேர்த்தார். சாய் கிஷோர் வீசிய பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய என். ஜெகதீசன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் அரை சதம் கடந்து 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜெகதீசன் அதிரடியாக ஆட மறுமுனையில் களமிறங்கிய ஷிவம் துபே (0), தோனி (7) ஆகியோர் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர்.
ஜெகதிசன் 33 பந்துகளில் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்களை சேர்த்தது. இதனைத்தொடர்ந்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கவுள்ளது.