ஐபிஎல் போட்டியில் நான்கு வருடங்களில் தலா 600 ரன்களுக்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார் லக்னெள அணியின் கேப்டன் கே.எல். ராகுல்.
ஆர்சிபி அணிக்கு எதிரான பிளேஆஃப் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது லக்னெள அணி. இந்த ஆட்டத்தில் லக்னெள கேப்டன் கே.எல். ராகுல் 58 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
நேற்று தனது 100-வது ஐபிஎல் இன்னிங்ஸை விளையாடினார் ராகுல். 3889 ரன்களுடன் முதல் 100 ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மேலும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் 15 ஆட்டங்களில் 2 சதங்கள், 4 அரை சதங்களுடன் 616 ரன்கள் எடுத்துள்ளார் ராகுல். ஸ்டிரைக் ரேட் - 135.38.
ஐபிஎல் போட்டியில் இதுபோல ஒரு பருவத்தில் 600க்கும் அதிகமான ரன்களை அவர் எடுப்பது இது 4-வது முறை. ஐபிஎல் போட்டியில் வேறு எந்த வீரரும் இதுபோல 4 முறை 600 ரன்களை எடுத்ததில்லை. 2018, 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் 600 ரன்களை ராகுல் கடந்துள்ளார். கெயில், வார்னர் ஆகிய இருவரும் 3 முறை 600 ரன்களைக் கடந்துள்ளார்கள். இவர்களைப் பின்னுக்குத் தள்ளி தற்போது புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார் ராகுல்.