சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி களமிறங்கவில்லை.
ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு பதில் மாற்று விக்கெட் கீப்பராக சாம் பில்லிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியின் போதே தோனிக்கு முதுகுப் பிடிப்பு ஏற்பட்டது. கடந்த போட்டியின் முடிவில் இதுகுறித்து தோனி தெரிவிக்கையில், "சிறிதளவு முதுகுப் பிடிப்பு உள்ளது. அது சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார்.
இந்த நிலையில், ஹைதராபாத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி விளையாடவில்லை.
இந்த போட்டியின் டாஸ் போடும் நேரத்தில் தோனியின் காயம் குறித்து சுரேஷ் ரெய்னா தெரிவிக்கையில், "தோனி சற்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று விரும்பினார். அடுத்த போட்டியில் அவர் களமிறங்குவார்" என்றார்.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே தோனி ஓய்வெடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. உலகக் கோப்பை தொடரும் வரவுள்ளதால் அதையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
இதன்மூலம், 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸை தோனி வழிநடத்தாதது இதுவே முதன்முறை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி களமிறங்காதது இது 4-ஆவது முறை.