2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இறுதிப் போட்டி சென்னையில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் புதுப்பிக்கப்பட்டவுடன் அதில் ஐ, ஜே மற்றும் கே ஆகிய 3 கேலரிகள் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி சென்னை மாநகராட்சி அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் ஒவ்வொரு போட்டியின்போதும் 12 ஆயிரம் இருக்கைகள் கொண்ட அந்த 3 கேலரிகள் தவிர்த்து டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், 49 ஆயிரம் இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் மைதானத்தில் இந்த 3 கேலரிகளுக்கும் தடை நீடிப்பதால், பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
ஆனால், முழு இருக்கைகளுக்கான டிக்கெட் விற்பனை நடைபெறாத இயலாத காரணத்தால், மே 14-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியை ஹைதராபாத்தின் உப்பல் பகுதியில் அமைந்துள்ள உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
பொதுவாக நடப்பு சாம்பியன் அணியின் மைதானத்தில் மட்டுமே இறுதிப் போட்டி நடைபெறும் என்ற நிலையில், இந்த மாற்றம் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் முதல் குவாலிஃபையர் போட்டி சென்னையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.