இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல் ஆறு ஆட்டங்களில் தோல்வியடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, அடுத்த ஐந்து ஆட்டங்களில் நான்கை வென்று அசத்தியுள்ளது. அதுவும் கடந்த மூன்று ஆட்டங்களைத் தொடர்ச்சியாக வென்று பிளேஆஃப் கனவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
இதைவிடவும் இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் ஆரம்பத்திலிருந்து கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி தற்போது ஒரு படி மேலேறி 8 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணியும் ஆர்சிபி அணியும் தலா 8 புள்ளிகளுடன் உள்ளன என்பது ஆச்சர்யமான விஷயமே!
நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-வது வெற்றியைப் பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.