நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2019 (12-வது சீசன் போட்டி) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையில் சிஎஸ்கேவும், இந்திய கேப்டன் கோலி தலைமையில் ஆர்சிபி அணிகளும் களமிறங்குகின்றன.
இந்த வருட ஐபிஎல் போட்டியில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் வர்ணனையாளராக அறிமுகம் ஆகிறார் இந்தியாவுக்காக விளையாடிய பெங்கால் வீரர் மனோஜ் திவாரி.
33 வயது மனோஜ் திவாரி, 12 ஒருநாள், 3 டி20 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருடம் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த திவாரி, 5 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். இதையடுத்து 2019 ஐபிஎல் போட்டிக்கான ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.
இந்நிலையில் தற்போது புதிய பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் திவாரி. ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனத்தில் வர்ணனையாளராக இணைந்துள்ளார். பெங்காலி, ஹிந்தி என இரு மொழிகளில் தான் வர்ணனை செய்யவுள்ளதாக மனோஜ் திவாரி கூறியுள்ளார்.