ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடனான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
12-ஆவது ஐபிஎல் சீசன் இன்று சேப்பாக்கத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 70 ரன்களுக்கு சுருண்டது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பேட்டிங் விவரம்: https://goo.gl/Xp4dDV
இதையடுத்து, 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியில் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து ராயுடுவும், ரெய்னாவும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் 15 ரன்களை அடித்த ரெய்னா, ஐபிஎல் கிரிக்கெட்டில் 5000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற மைல்கல்லை அடைந்தார். இதையடுத்து, அவர் 19 ரன்கள் எடுத்திருந்த போது மொயின் அலி பந்தில் ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து, ராயுடுவுடன் ஜாதவ் இணைந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராயுடு 28 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் போல்டானார். அதன்பிறகு, ஜாதவ் மற்றும் ஜடேஜா சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
சென்னை அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 71 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஜாதவ் 13 ரன்களுடனும், ஜடேஜா 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.