மன்கட் முறையிலான அவுட் வேண்டாம் என ஐபிஎல் கேப்டன்கள் முடிவெடுத்தார்கள்: ஐபிஎல் தலைவரின் ஆச்சர்யக் கருத்து!

மன்கட் முறையில் பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்யக்கூடாது என முடிவெடுக்கப்பட்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில்...
IPL Chairman Rajeev Shukla
IPL Chairman Rajeev Shukla

ஐபிஎல் போட்டி வரலாற்றில் மன்கட் முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் ஜாஸ் பட்லர். நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப். கிறிஸ் கெயில் அபாரமாக ஆடி 79 ரன்களை விளாசினார். முதலில் ஆடிய பஞ்சாப் 184/4 ரன்களையும், பின்னர் ஆடிய ராஜஸ்தான் 170/9 ரன்களையும் எடுத்தன. 

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஒன்று ஏற்பட்டது. 2 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தார் அஸ்வின்.  அவர் பந்துவீச முயன்றபோது கிரிஸுக்கு வெளியே பட்லர் பேட்டை நகர்த்தியதால் சமயோசிதமாக மன்கட் செய்தார் அஸ்வின். எனினும் இதுபோல ஒரு பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்வது தவறு என ஷேன் வார்னே உள்பட பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து வீரர்கள் பலரும் அஸ்வினுக்கு எதிராக  ட்வீட்களை வெளியிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் ஒரு ஐபிஎல் சீசனில் மன்கட் முறையிலான ஆட்டமிழப்பைத் தவிர்க்க ஐபிஎல் கேப்டன்கள் முடிவெடுத்ததாக ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

என் நினைவில் உள்ளது சரியென்றால், ஒரு கூட்டத்தில் ஐபிஎல் கேப்டன்களும் நடுவர்களும் - நானும் ஐபிஎல் தலைவராக அந்தக் கூட்டத்தில் இருந்தேன் - மரியாதை கருதி மன்கட் முறையில் பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்யக்கூடாது என முடிவெடுக்கப்பட்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் தோனியும் கோலியும் கூடக் கலந்துகொண்டார்கள் எனக் கூறியுள்ளார்.

மன்கட் சர்ச்சை வெடித்துள்ள நிலையில் ஐபிஎல் தலைவர் இவ்வாறு பேசியுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com