அஸ்வின் செயலை மன்னிக்கக் கூடாது: பட்லர் - மன்கட் சர்ச்சை குறித்து ஷேன் வார்னே ஆவேசம்!

அஸ்வின் செய்தது இழிவான செயல். ஐபிஎல்-லில் இதுபோன்ற ஒரு நடவடிக்கையை ஐபிஎல் நிர்வாகம் மன்னிக்காது என...
அஸ்வின் செயலை மன்னிக்கக் கூடாது: பட்லர் - மன்கட் சர்ச்சை குறித்து ஷேன் வார்னே ஆவேசம்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப். கிறிஸ் கெயில் அபாரமாக ஆடி 79 ரன்களை விளாசினார். முதலில் ஆடிய பஞ்சாப் 184/4 ரன்களையும், பின்னர் ஆடிய ராஜஸ்தான் 170/9 ரன்களையும் எடுத்தன. 

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஒன்று ஏற்பட்டது. 2 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தார் அஸ்வின்.  அவர் பந்துவீச முயன்றபோது கிரிஸுக்கு வெளியே பட்லர் பேட்டை நகர்த்தியதால் சமயோசிதமாக மன்கட் செய்தார் அஸ்வின். எனினும் இதுபோல ஒரு பேட்ஸ்மேனை ஆட்டமிழப்பது தவறு என ஷேன் வார்னே உள்பட பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து வீரர்கள் பலரும் அஸ்வினுக்கு எதிராக  ட்வீட்களை வெளியிட்டுள்ளார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது அந்த அணியின் விளம்பரத் தூதருமான ஷேன் வார்னே அஸ்வினைக் கண்டித்து ட்விட்டரில் ட்வீட்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறியுள்ளதாவது:

ஒரு கேப்டனாகவும் மனிதராகவும் அஸ்வின் நடவடிக்கையைக் கண்டு வருந்துகிறேன். கண்ணியத்துடன் விளையாடுவதற்கு எல்லா கேப்டன்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். பந்தை வீச அவர் முயலவில்லை. எனவே இதை டெட் பாலாக அறிவித்திருக்க வேண்டும். இது ஐபிஎல் போட்டிக்கு நல்லதல்ல என பிசிசிஐயிடம் தெரிவித்துக்கொள்கிறேன். அஸ்வின் செய்தது இழிவான செயல். ஐபிஎல்-லில் இதுபோன்ற ஒரு நடவடிக்கையை ஐபிஎல் நிர்வாகம் மன்னிக்காது என எண்ணுகிறேன். ஒரு கேப்டனாக உங்கள் அணி எப்படி விளையாடவேண்டும் என்றொரு நடைமுறையை நீங்கள் உருவாக்குகிறீர்கள். இதுபோன்ற இழிவான செயலை ஏன் செய்யவேண்டும்? அஸ்வின், இந்தக் கீழான செயலுக்காக நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள். என்ன செய்தாவது வெற்றி பெறவேண்டும் என்கிற எண்ணம் முதலில் மாறவேண்டும். கண்ணியத்துடன் விளையாடுவது தான் முக்கியமானது. கிரிக்கெட் விளையாடும் இளம் சிறுவர்களுக்கு நாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டும். 

விதிமுறைகளை முன்வைத்து இதற்கு ஆதரவளிக்கும் முன்னாள் வீரர்களுக்கு - அஸ்வின் செய்தது உங்களுக்குப் பிடிக்கவில்லை, நீங்கள் இப்படி செய்யமாட்டீர்கள் என்றால் ஏன் என்று கேட்கிறேன். இது இழிவான, சங்கடப்படுத்தும் செயலாகும். மேலும் விளையாட்டின் கண்ணியத்தையும் கெடுக்கிறது. இதுபோல விராட் கோலிக்கு பென் ஸ்டோக்ஸ் செய்தால் அது சரியா? அஸ்வின் என்னை ஏமாற்றியுள்ளார். அவரிடம் நியாயமும் தரமும் உள்ளது என எண்ணினேன். பஞ்சாப் அணி இதனால் பல ஆதரவாளர்களை இழந்துள்ளது, முக்கியமாக இளம் சிறுவர்களின் ஆதரவை. இதுகுறித்து பிசிசிஐ ஏதாவது நடவடிக்கை எடுக்கும் என எண்ணுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் நிபுணர் ஹர்ஷா போக்ளேவிடமும் ஆவேசத்துடன் உரையாடினார் வார்னே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com