அஸ்வின் கிரிக்கெட்டின் கண்ணியத்தை மீறிவிட்டார்: நிலைப்பாட்டைத் திடீரென மாற்றிக்கொண்ட எம்சிசி

அஸ்வின் பந்துவீசும் நிலைக்கு வந்தபோது பட்லரின் பேட் க்ரிஸுக்குள் தான் இருந்தது...
அஸ்வின் கிரிக்கெட்டின் கண்ணியத்தை மீறிவிட்டார்: நிலைப்பாட்டைத் திடீரென மாற்றிக்கொண்ட எம்சிசி

ஐபிஎல் போட்டி வரலாற்றில் மன்கட் முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் ஜாஸ் பட்லர் என்பதால் அது குறித்து அதிக சர்ச்சை உருவாகியுள்ளது. திங்கள் அன்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப். கிறிஸ் கெயில் அபாரமாக ஆடி 79 ரன்களை விளாசினார். முதலில் ஆடிய பஞ்சாப் 184/4 ரன்களையும், பின்னர் ஆடிய ராஜஸ்தான் 170/9 ரன்களையும் எடுத்தன. 

2 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தார் அஸ்வின்.  அவர் பந்துவீச முயன்றபோது கிரிஸுக்கு வெளியே பட்லர் பேட்டை நகர்த்தியதால் சமயோசிதமாக மன்கட் செய்தார் அஸ்வின். எனினும் இதுபோல ஒரு பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்வது தவறு என ஷேன் வார்னே உள்பட பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து வீரர்கள் பலரும் அஸ்வினுக்கு எதிராக  ட்வீட்களை வெளியிட்டுள்ளார்கள்.

சம்பவம் நடைபெற்றவுடன் அஸ்வினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த, கிரிக்கெட் ஆட்டங்களுக்கு விதிமுறை பரிந்துரை செய்யும் எம்சிசி அமைப்பு தற்போது அதற்கு மாறுபாடான கருத்தைத் தெரிவித்துள்ளது. 

மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்த விவகாரத்தில் அஸ்வின் கிரிக்கெட் கண்ணியத்தை மீறிவிட்டார் என்று எம்சிசி கிரிக்கெட் அகாடமி மேலாளர் ஃபிரேசர் ஸ்டீவர்ட் தற்போது கூறியுள்ளார்.

க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மன்கட் முறையில் பட்லரை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்த காணொளியை மீண்டும் ஆராய்ந்தோம். அஸ்வின் பந்துவீசும் நிலைக்கு வந்தபோது பட்லரின் பேட் க்ரிஸுக்குள் தான் இருந்தது. அஸ்வின் பந்துவீசி விடுவார் என்றுதான் பேட்ஸ்மேன் நினைக்ககூடும். ஆனால் அஸ்வின் பந்துவீசாமல் தன்னுடைய செய்கையை அப்படியே நிறுத்திவிட்டார். இதன்மூலம் பட்லர் கிரிஸுக்கு வெளியே செல்லும்வரை அஸ்வின் காத்திருந்தார். அதன்பிறகு அவர் ஸ்டம்ப்பை தட்டிவிட்டார். அஸ்வின் தனது பந்துவீசும் செய்கையை நீண்ட நேரம் நிறுத்தி வைத்தார். அப்படியே அதே வேகத்தில் தொடரவில்லை. எனவே இது கிரிக்கெட் கண்ணியத்துக்கு எதிரானதாகக் கருதுகிறோம். பந்துவீசுவதை அவர் தாமதப்படுத்தியதால் தான் பட்லர் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அஸ்வினின் புஜம் மேலே முழுவதுமாகச் செல்லவில்லை. முதல்முறை மன்கட் முறையில் ஆட்டமிழந்தபோது பட்லர் வெளியே சென்றுவிட்டார். ஆனால் இந்தமுறை அவர் முன்பே கிரீஸை விட்டுச் செல்லவில்லை. 

இதிலிருந்து பேட்ஸ்மேன்களுக்குச் சொல்லிக்கொள்வது, பந்துவீச்சாளர் பந்தை வீசி முடிக்கும்முன்பு கிரீஸை விட்டு வெளியே வரவேண்டாம். இதுபோல ஆட்டமிழப்புகள் தேவையில்லை. அதேபோல பந்துவீச்சாளரும் பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு வெளியேறும்வரை பந்துவீசும் முறையைத் தாமதப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com