ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பரபரப்பான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ். முதலில் ஆடிய மும்பை 187/8 ரன்களை குவித்தது. கேப்டன் ரோஹித் 48 ரன்களை விளாசினார். பின்னர் ஆடிய பெங்களூரு அணி 181/5 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. அபாரமாக ஆடி 70 ரன்களை விளாசிய டிவில்லியர்ஸ் ஆட்டம் வீணாகியது.
கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டன. மலிங்கா வீசிய முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் டூபே. கடைசிப் பந்தில் ஏழு ரன்கள் தேவை என்கிற நிலைமையில் அந்தப் பந்தில் டூபேவால் ஒரு ரன்னும் எடுக்கமுடியாமல் போனது. எனினும் மலிங்கா வீசிய அந்தப் பந்து நோ பாலாக அமைந்தது. கிரீஸுக்கு வெளியே காலை வைத்து மலிங்கா வீசியதை கள நடுவர் ரவி கவனிக்க மறந்துவிட்டார். இந்தக் காட்சியைப் பெரிய திரையில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அந்தப் பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டிருந்தால் அது ஆர்சிபி அணி வெல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கும். அடுத்தப் பந்து ஃப்ரீ ஹிட் என்பதால் அதை சிக்ஸருக்கு விரட்டியிருக்க வாய்ப்புண்டு. இதனால் ஆர்சிபி அணியும் இந்த ஆட்டத்தில் வென்றிருக்கும். எல்லாமே நடுவரின் தவறால் நிகழாமல் போனது.
பரிசளிப்பு விழாவில் தன்னுடைய கோபத்தை மறைக்காமல் பேசினார் விராட் கோலி. நாங்கள் ஐபிஎல் நிலையில் விளையாடுகிறோம். இது கிளப் கிரிக்கெட் அல்ல. கடைசிப் பந்தை நோ பால் என அறிவிக்காதது அநியாயம். நடுவர்கள் தங்களுடைய கண்களைத் திறந்துகொண்டு கவனிக்கவேண்டும். ஓர் அங்குலம் இடைவெளியில் அது நோ பாலாக உள்ளது. அப்படிக் கவனிக்கப்படிருந்தால் இது முற்றிலும் வேறான ஆட்டமாக இருந்திருக்கும். நடுவர்கள் இன்னமும் கூர்மையாகவும் கவனமாகவும் ஆடுகளத்தில் இருக்கவேண்டும் என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
ரோஹித் சர்மாவும் கள நடுவரை விமரிசனம் செய்தார். அவர் கூறியதாவது: மைதானத்தை விட்டு வெளியேறிய பிறகுதான் அது நோ பால் எனத் தெரிந்தது. இதுபோன்ற தவறுகள் விளையாட்டுக்கு நல்லதல்ல. அதற்கு முந்தைய ஓவரில் பும்ரா வீசிய பந்து தவறுதலாக வைட் என அறிவிக்கப்பட்டது என்று கூறினார்.