தனிநபரின் முயற்சியால் மட்டுமே நாங்கள் வெல்வதில்லை: ரோஹித் சர்மா பேட்டி

எங்கள் அணி ஒருவர் அல்லது இருவரின் பங்களிப்புகளில் வெற்றிகளைப் பெறுவது கிடையாது
தனிநபரின் முயற்சியால் மட்டுமே நாங்கள் வெல்வதில்லை: ரோஹித் சர்மா பேட்டி

நேற்று  நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத்தை சூப்பர் ஓவரில் வீழ்த்திய மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை குவித்தது மும்பை. 2 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 69 ரன்கள் எடுத்தார் டி காக்.

163 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத், 20 ஓவர்களின் முடிவில் 162 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தால் ஆட்டம் டை ஆகும் என்கிற நிலையில் பாண்டியாவின் பந்தை சிக்ஸர் அடித்து ஆச்சர்யப்படுத்தினார் மணீஷ் பாண்டே. மணிஷ் பாண்டே 2 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 71 ரன்களை விளாசினார்.

ஆட்டம் டை ஆனதால், சூப்பர் ஓவர் நடைபெற்றது. முதலில் ஹைதராபாத் பேட்டிங் செய்தது. 2 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் மட்டுமே குவித்தது. பும்ரா அற்புதமாகப் பந்துவீசி குறைந்த ரன்களே கொடுத்தார். இரண்டாவதாக ஆடிய மும்பை விக்கெட் இழப்பின்றி 9 ரன்களை எடுத்து வென்றது. ரஷித் கான் வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார் பாண்டியா.  

புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்ற மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஹைதராபாத் 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

இந்த வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

2017-ம் ஆண்டு இரண்டு ஆட்டங்கள் மீதமிருந்த நிலையில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றோம். அப்போது போட்டியையும் வென்றோம். அழுத்தமான தருணங்களை நாங்கள் நன்குக் கையாண்டுள்ளோம். 

அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் குயிண்டன் டி காக்கைத் தவிர வேறு மும்பை வீரர்கள் யாரும் இல்லை. காரணம், அனைத்து பேட்ஸ்மேன்களும் பொறுப்பைச் சரிசமாகப் பகிர்ந்துகொண்டதுதான். எங்கள் அணி ஒருவர் அல்லது இருவரின் பங்களிப்புகளில் வெற்றிகளைப் பெறுவது கிடையாது. 

ஐபிஎல் போட்டியை வெல்ல வேண்டுமென்றால் அணியில் உள்ள ஒவ்வொருவரும் நன்றாக விளையாட வேண்டும். ராகுல் சஹாராக இருந்தாலும் சரி குயிண்டன் டி காக்காக இருந்தாலும் சரி, அனைவருமே வெற்றிக்குப் பங்களிப்பார்கள். தனிநபர்கள் தங்களின் முயற்சியால் அணிக்கு வெற்றி தேடித்தருவதை நாங்கள் விரும்பமாட்டோம். எல்லோரும் பங்களித்து அணியை வெற்றிக்கோட்டுக்கு அருகே கொண்டுசெல்லவேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com