தில்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 8-வது முறையாக தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் சென்னை.
ஐபிஎல் 2019 ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ்-தில்லி கேபிடல்ஸ் அணிகள் இடையிலான குவாலிபையர் 2 ஆட்டம் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை சேர்த்தது தில்லி. ரிஷப் பந்த் 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 38 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். சென்னை தரப்பில் தீபக் சஹார் 2-28, ஹர்பஜன் சிங் 2-31, ரவீந்திர ஜடேஜா 2-23 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை தரப்பில் களமிறங்கிய வாட்ஸனும், டூபிளெஸ்ஸிஸும் இந்தமுறை பொறுப்புடன் விளையாடியதால் பவர்பிளேயில் சென்னை அணி விக்கெட் எதுவும் இழக்கவில்லை. 1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 39 பந்துகளில் 50 ரன்களுடன் டூபிளெஸ்ஸிஸும், 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 32 பந்துகளில் 50 ரன்களுடன் வாட்ஸனும் ஆட்டமிழந்தார்கள். 19 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 151 ரன்களை எடுத்து வென்றது சென்னை.
இந்த வெற்றி மூலம் 8-வது முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்துள்ள சென்னை, வரும் 12-ம் தேதி ஹைதராபாத்தில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் மோதுகிறது. இரு அணிகளும் நான்காவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளன.