வெற்றி, தோல்விகளில் உடனிருந்த ரசிகர்களுக்கு மனப்பூர்வமான நன்றி
2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்புடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று 4-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ந்து அனைத்து தருணங்களிலும் ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள இதர பகுதிகளிலும் சிஎஸ்கே அணிக்கு ஆதரவு வளர்ந்து வருகிறது.
இந்நிலையில், எந்த சூழ்நிலையிலும் தங்கள் மீது நம்பிக்கை வைத்து, வெற்றி - தோல்வி என அனைத்து தருணங்களிலும் உடனிருந்த ரசிகர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மனப்பூர்வமான நன்றி தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், எது நடந்தாலும் சிங்கத்தின் வேட்டை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.