கராச்சி: டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணம் அடுத்த ஆண்டு அக்டோபருக்கு ஒத்திவைக்கப்பட்டலாம் எனத் தெரிகிறது.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறியதாவது:
முன்னதாக இங்கிலாந்து - பாகிஸ்தான் டி20 தொடர் 2021 ஜனவரி - பிப்ரவரியில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது அந்தத் தொடர் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக அக்டோபருக்கு ஒத்திவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை மற்றும் இந்தியாவுடனான தொடர்களில் இங்கிலாந்து விளையாடவுள்ளது. அதேபோல், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிக் பாஷ் லீக் போட்டிக்காக இங்கிலாந்து வீரர்கள் பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
செலவினங்களும் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ஒத்திவைப்பதற்கான மற்றொரு காரணமாகும். மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரே ஒரு டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களுக்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. அதையும் முதலில் அவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் துபைக்கும், பின்னர் போட்டி நடைபெறும் கராச்சி நகரத்துக்கும் இயக்க வேண்டியுள்ளது.
எனவே, அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறும் முன்பாக இந்தத் டி20 தொடரை அக்டோபரில் நடத்தினால் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து அப்படியே இந்தியா பயணிக்க வசதியாக இருக்கும். இதுதொடர்பாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்று அந்த வட்டாரங்கள் கூறின.
பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் இங்கிலாந்து அணி கிரிக்கெட் விளையாடச் சென்றதில்லை.
இந்நிலையில், டி20 தொடருக்காக இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு பாகிஸ்தான் வருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.