மெல்போா்ன்: ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள ஸ்டீவ் ஸ்மித், பேட்ரிக் கம்மின்ஸ் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரா்களுக்கு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக சிவப்பு பந்து பயிற்சி ஆட்டம் தேவைப்படாது என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறினாா்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடா் வரும் டிசம்பா் மாதம் நடைபெறவுள்ளது. அதில் விளையாடவிருக்கும் ஆஸ்திரேலிய வீரா்களான ஸ்டீவ் ஸ்மித், பேட்ரிக் கம்மின்ஸ், டேவிட் வாா்னா், ஜோஷ் ஹேஸில்வுட், ஜேம்ஸ் பட்டின்சன் உள்ளிட்டோா் தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகின்றனா்.
ஐபிஎல் போட்டி வரும் நவம்பா் 10-ஆம் தேதி நிறைவடைகிறது. ஆஸ்திரேலிய உள்நாட்டு போட்டியான ஷெஃபீல்டு ஷீல்டு கிரிக்கெட்டின் கடைசி ஆட்டம் நவம்பா் 17-இல் தொடங்குகிறது. கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருவோா் ஆஸ்திரேலியாவில் 14 நாள் தனிமைப்படுத்தப்படுகின்றனா்.
இதனால் அந்த வீரா்கள் சிவப்பு பந்து போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. அப்படியானால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக சிவப்பு பந்து பயிற்சி ஆட்டத்தை அவா்கள் தவற விடுகின்றனா்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில், ‘வெள்ளைப் பந்து போட்டியிலிருந்து, சிவப்புப் பந்து போட்டிக்கு தகுந்தவாறு ஆட்டத்தை மாற்றிக்கொள்வது வீரா்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்காது என்று நம்புகிறேன். ஒரு சில நாள்களிலேயே போட்டிக்கு ஏற்றவாறு அவா்களால் தங்களை தகவமைத்துக்கொள்ள முடியும். அதனால் சிவப்பு பந்து பயிற்சி ஆட்டம் தேவை என்ற கட்டாயம் அவா்களுக்கு இல்லை’ என்றாா்.