அபுதாபி: ராஜஸ்தான் ராயஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது சூர்யகுமார் யாதவ் விளாசிய ஷாட்கள் அருமையாக இருந்தது என்று அவரது மும்பை இண்டியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.
அபுதாபியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 18.1 ஓவர்களிலேயே 136 ரன்களுக்கு சுருண்டது.
மும்பை இன்னிங்ஸின்போது இதர பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேகரிக்கத் தவறிய நிலையில், அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 79 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதுகுறித்து மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், "சூர்யகுமார் யாதவால் மிகப்பெரிய ஷாட்களை அடிக்க இயலும். இதுகுறித்து அவரிடம் ஆட்டத்துக்கு முன்பாக பேசியிருந்தேன். மும்பையின் அனைத்து ஆட்டங்களிலும் அவர் சிறப்பாக ஆடி வருகிறார். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அருமையாக ஆடத் தொடங்கிய அவரது ஷாட்கள் குறையில்லாததாக இருந்தன. கடைசி வரை அவர் அவ்வாறு அடித்து ஆட விரும்பினோம்' என்றார்.
இதனிடையே, ராஜஸ்தான் தோல்வி குறித்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், "எங்களது இன்னிங்ஸின்போது விக்கெட்டுகளை விரைவாக இழந்ததால் இலக்கை எட்டுவது கடினமாகியது. கடைசி 3 ஆட்டங்களிலுமே எங்களது பேட்டிங் வரிசையால் நல்லதொரு தொடக்கத்தை அளிக்க இயலவில்லை. ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர் தவிர அனைவருமே பேட்டிங்கில் தேவையான மாற்றத்தை கொண்டுவர வேண்டியுள்ளது' என்றார்.