கள நடுவர்கள் தீர்ப்பளிக்கும் ஃபுல்டாஸ் நோ பால், வைட்களுக்கும் டிஆர்எஸ் தேவை என ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
சக இந்திய வீரர் கே.எல். ராகுலுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் விராட் கோலி கூறியதாவது:
ஒரு கேப்டனாக இதைப் பேசுகிறேன். கள நடுவர்கள் தீர்ப்பளிக்கும் ஃபுல்டாஸ் நோ பால், வைட்களுக்கும் டிஆர்எஸ் தேவை. கள நடுவர்கள் தவறாகத் தீர்ப்பளிக்கும்போது டிஆர்எஸ் தேவையாக இருக்கிறது. இவையெல்லாம் எந்தளவுக்கு முக்கியமான விஷயங்கள் என்பதை ஐபிஎல் போட்டியிலும் டி20 ஆட்டங்களிலும் பார்த்துள்ளோம்.
வேகமாக நடைபெறும் ஆட்டங்களில் சிறிய தவறு செய்தாலும் அது ஆட்டத்தின் முடிவைப் பாதிக்கின்றன நீங்கள் ஒரு ரன்னில் தோற்றால், உங்களால் நடுவரின் தவறான வைட் தீர்ப்பை மாற்ற முடியவில்லையென்றால் ஒரு போட்டியில் உங்கள் அணியின் பயணத்தை அதை மாற்றக் கூடியதாக இருக்கும் என்றார்.
கோலியின் கோரிக்கையை ராகுலும் ஏற்றுக்கொண்டார். இந்த விதிமுறை அமலுக்கு வந்தால் நன்றாக இருக்கும். ஓர் அணிக்கு இரு ரெவ்யூக்கள் வழங்கலாம். அதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றார்.
அதேபோல ராகுல் மற்றொரு கோரிக்கையை முன்வைத்தார். ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் சிக்ஸர் 100 மீட்டரைத் தாண்டிச் சென்றால் ஆறு ரன்களுக்குப் பதிலாகக் கூடுதல் ரன்கள் வழங்கவேண்டும். என்னுடைய பந்துவீச்சாளர்களிடம் இதுபற்றிய கருத்தைக் கேட்கவுள்ளேன் என்றார்.