கொல்கத்தா அணி கேப்டனை மாற்றியது தவறான முடிவு: அஜித் அகர்கர்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக இயன் மார்கனை நியமித்தது தவறான முடிவு என முன்னாள் வீரர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இதையடுத்து இங்கிலாந்து வீரர் இயன் மார்கன் கேப்டனாகத் தேர்வாகியுள்ளார்.
பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேகேஆர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இதையடுத்து அணியின் துணை கேப்டனான இயன் மார்கன், கேப்டனாகத் தேர்வாகியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் மார்கன் தலைமையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி முன்னாள் வீரர் அஜித் அகர்கர் கூறியதாவது:
கொல்கத்தா அணி புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்தில் இருக்கும்போது கேப்டனாக தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக இயன் மார்கனை நியமித்தது தவறான முடிவு. இது அணியினரின் உணர்வுகளைத் தொந்தரவு செய்யும். கடினமான ஆட்டமாக இருந்தாலும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இதைக் காண முடிந்தது. இயன் மார்கனை கேப்டனாக நியமித்தது சரியான முடிவல்ல. அணிக்கான திட்டங்களை ஒருவருடத்துக்கு கேப்டனுடன் இணைந்து எடுக்க வேண்டும். புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்தில் இருந்தும் இது நடந்தது எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது என்றார்.