கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாட், அதிலிருந்து குணமாகி பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சிஎஸ்கே வீரர் ருதுராஜ் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்த புதிதில் இரண்டு வீரர்கள் உள்பட சிஎஸ்கேவைச் சேர்ந்த 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. பிறகு ருதுராஜைத் தவிர அனைவரும் குணமானார்கள். கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமான வேகப்பந்துவீச்சாளர் சஹார், முதல் ஆட்டத்தில் விளையாடினார்.
இந்நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள ருதுராஜ், ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அனுமதியை பிசிசிஐயிடமிருந்து பெற்றுள்ளார். இதையடுத்து அணி வீரர்களுடன் இணைந்து தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
ஷார்ஜா மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி நாளை விளையாடவுள்ளது. இதில் ருதுராஜ் பங்கேற்க வாய்ப்புள்ளதா என்பது தெரியவில்லை. முதல் ஆட்டத்தில் மோசமாக விளையாடிய முரளி விஜய்க்குப் பதிலாக ருதுராஜ், சிஎஸ்கே அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.