ஒலிம்பிக்ஸில் சாதித்த ஹரியாணா ஹாக்கி வீராங்கனைகளுக்குப் பரிசுத்தொகை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் மனோஹர் லால் கட்டார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவை 4-3 என வீழ்த்தி வெண்கலம் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. மகளிர் ஹாக்கியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் உலகின் 2-ஆம் நிலை அணியான ஆர்ஜென்டீனாவிடம் வீழ்ந்தது. தனது ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி வரை முன்னேறியிருந்த இந்திய மகளிர் அணி, அடுத்ததாக வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்தை இன்று சந்தித்தது.
ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 2-0 என முன்னிலை பெற்றது. அதன்பிறகு இந்திய மகளிர் அணி சுறுசுறுப்பாக விளையாடி அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து முன்னணி பெற்றது. இதனால் ஆட்டம் பரபரப்பானது. ரியோ ஒலிம்பிக்ஸில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி, மீண்டும் 2 கோல்களை அடித்து 4-3 என ஆட்டத்தை வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இந்திய மகளிர் ஹாக்கி அணியில் கேப்டன் ராணி ராம்பால், நவ்ஜோத் கெளர், சவிதா புனியா, நேஹா கோயல், மோனிகா மாலிக், நவ்னீத் கெளர், நிஷா, ஷர்மிளா தேவி, உதிதா ஆகிய 9 ஹரியாணா வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளார்கள். அவர்களின் சாதனைக்கு ஊக்கமளிக்கும் விதமாக 9 பேருக்கும் தலா ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மனோஹர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.