டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கோல்ப் விளையாட்டில் சிறப்பாக விளையாடி 4-ம் பிடித்த இந்திய வீராங்கனை அதிதி அசோக்குக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கோல்ப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக், 4-ம் இடம் பிடித்து நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டார். இன்று நடைபெற்ற கோல்ப் போட்டியில் அதிதி அசோக், பதக்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. நேற்றைய ஆட்டத்தின் முடிவில் அவர் 2-ம் இடத்தில் இருந்தார். இந்நிலையில் போட்டியின் முடிவில் 4-ம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை அதிதி அசோக் தவறவிட்டார்.
ரியோ ஒலிம்பிக்ஸில் 41-வது இடம் பெற்ற 23 வயது அதிதி, இம்முறை தொடர்ந்து முன்னிலை பெற்று இந்திய விளையாட்டு ரசிகர்களிடம் கோல்ப் விளையாட்டின் மீதான கவனத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் பலருடைய பாராட்டுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அதிதி அசோக்குக்குப் பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி, ட்விட்டரில் கூறியதாவது:
நன்றாக விளையாடினீர்கள் அதிதி அசோக். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் திறமையை வெளிப்படுத்தி மன உறுதியுடன் செயல்பட்டீர்கள். நூலிழையில் பதக்கம் கிடைக்கவில்லை. ஆனால் எந்த இந்தியரை விடவும் முன்னேறிச் சென்று மற்றவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள். வருங்காலப் போட்டிகளுக்கு என் வாழ்த்துகள் என்றார்.