இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது.
இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் வென்றுள்ள இந்திய அணி, 3-வது டெஸ்டிலும் வென்று நியூஸிலாந்து அணியை "ஒயிட் வாஷ்' ஆக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. டாஸ் வென்ற விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு
செய்தார். இந்திய அணியில் தவான், புவனேஸ்வருக்குப் பதிலாக கம்பீர், உமேஷ் யாதவ் இடம்பிடித்தார்கள்.
முரளி விஜயுடன் தொடக்க வீரராக கெளதம் கம்பீர் களமிறங்கினார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிற கம்பீருக்கு இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாகும். இதில் சிறப்பாக ஆடி ரன் குவிக்கும்பட்சத்தில்
இந்திய அணியில் கம்பீர் தனது இடத்தை தக்கவைக்க முடியும்.
மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கினார்கள் முரளி விஜய்யும் கம்பீரும். ஆனால் 2 பவுண்டரிகள் அடித்த விஜய், 10 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது ஓவரில் போல்ட்டின் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் கம்பீர். கவனமாக ஆடிவந்த கம்பீர் 53 பந்துகளில் 29 ரன்களை எடுத்து எல்பிடபிள்யூ முறையில் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
உணவு இடைவேளையின்போது இந்திய அணி 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 29, கோலி 7 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.