இந்தியா, இலங்கை இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்திலும், 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. மேலும், 2-0 என தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில், கொழும்புவில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 58-ஆவது ஓவரின் போது, இலங்கை பேட்ஸ்மேன் திமுத் கருணரத்னே அடித்த பந்தை ரவீந்திர ஜடேஜா பிடித்து அவர் மீதே திருப்பி வீசினார். ஆனால் பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு தாண்டவில்லை.
இதை கவனித்த கள நடுவர்களான ப்ரூஸ் ஆக்ஸன்ஃபோர்ட் மற்றும் ராட் டக்கர் ஆகியோர் 3-ஆவது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வர்த் மற்றும் 4-ஆவது நடுவர் ருசீரா பல்லியாகுருகே ஆகியோரிடம் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் 2.2.8 என்ற ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டை ஜடேஜா ஒப்புக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் 24 மாதத்திற்குள் இதுபோன்று குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு 8 புள்ளிகள் வரை பெற்றிருந்தால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். மேலும், போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
இதையடுத்து, ரவீந்திர ஜடேஜா இந்த குற்ற விதிகளின் காரணமாக பாலகலேவில் நடைபெறவுள்ள 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்து உள்ளது.