சென்னை சூப்பர் கிங்ஸை மட்டும் அனுமதிப்பது ஏன்?: மேல்முறையீடு செய்யவுள்ள பிசிசிஐ மீது ஸ்ரீசாந்த் சாடல்!

ஊழல் மற்றும் சூதாட்டம் தொடர்பான நடவடிக்கைகளில் பிசிசிஐ கடுமையான நிலைப்பாட்டை...
சென்னை சூப்பர் கிங்ஸை மட்டும் அனுமதிப்பது ஏன்?: மேல்முறையீடு செய்யவுள்ள பிசிசிஐ மீது ஸ்ரீசாந்த் சாடல்!

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ விதித்திருந்த வாழ்நாள் தடையை நீக்கியுள்ளது கேரள உயர் நீதிமன்றம். இதுதவிர ஸ்ரீசாந்துக்கு எதிராக பிசிசிஐ மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது கேரள உயர் நீதிமன்றம். இத்தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் பிசிசிஐ-யின் நடவடிக்கைக்கு ஸ்ரீசாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

2013-இல் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜீத் சாண்டிலா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்தது பிசிசிஐ. இந்த நிலையில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேரை ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் இருந்து தில்லி நீதிமன்றம் கடந்த 2015 ஜூலையில் விடுவித்தது. இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் ஸ்ரீசாந்த். அவருடைய மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், இது தொடர்பாக பிசிசிஐ தனது பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து பிசிசிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், "தில்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு (ஸ்ரீசாந்தை விடுவித்தது) மட்டும் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்குவதற்கு போதுமானதல்ல. அவர் மீதான தடையை நீக்கும்பட்சத்தில் அது ஐசிசியின் விதிமுறையை மீறிய செயலாகிவிடும். எனவே பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்குவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், "ஸ்ரீசாந்த் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை. எனவே அவர் மீதான வாழ்நாள் தடை நீக்கப்படுகிறது' என கூறியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீசாந்த், "கடவுளுக்கு நன்றி. மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு தயாராகிவிட்டேன். கேரள கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதே எனது இலக்கு' என்றார். ஸ்ரீசாந்த் மீண்டும் கேரள அணிக்காக விளையாடும் வகையில் நேர்மறையான முடிவு எடுக்கப்படும் என கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஸ்ரீசாந்த் விவகாரத்தில் பிசிசிஐயின் நிலைப்பாடு குறித்து அதன் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தீர்ப்பு குறித்து பிசிசிஐயின் சட்ட நிபுணர்கள் குழு ஆராய்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கும். அது தொடர்பாக பிசிசிஐயின் பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். எனினும் இந்தத் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தனி நீதிபதி அளித்த இந்தத் தீர்ப்பை ஒன்றுக்கும் மேற்பட்ட அமர்விடம் முறையிட முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பிசிசிஐயின் இந்த நடவடிக்கைக்கு ஸ்ரீசாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

பிசிசிஐக்கு... நிரபராதி என்று தீர்ப்பு கூறப்பட்டவருக்கு நீங்கள் செய்கிற அநியாயம் இது. ஒருமுறை அல்ல, மீண்டும் மீண்டும் செய்கிறீர்கள். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. ஊழல் மற்றும் சூதாட்டம் தொடர்பான நடவடிக்கைகளில் பிசிசிஐ கடுமையான நிலைப்பாட்டை எடுத்துவருகிறது என்று கூறுகிறீர்கள். எனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com