இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டி பகலிரவாக நடைபெறுகிறது. சர்வதேச அளவில் பகலிரவாக நடைபெறவுள்ள 5-ஆவது டெஸ்ட் போட்டி இது. இந்தப் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படுகிறது.
அதேநேரத்தில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுதான். இங்கிலாந்தில் நடைபெறுகிற பகலிரவு டெஸ்ட் போட்டியும் இதுதான். மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது.
மதியம் 2 மணிக்குப் போட்டி தொடங்குகிறது. இரவு 9 மணிக்கு முடிவடைகிறது. 90 ஓவர்கள் குறித்த நேரத்தில் முடியவில்லையென்றால் ஆட்டம் 9.30 வரை நடைபெறலாம்.
முதல் பகுதி: மதியம் 2 - 4
மதிய உணவு இடைவேளை - மாலை 4 - 4.40
இரண்டாம் பகுதி: மாலை 4.40 - 6.40
தேநீர் இடைவேளை: மாலை 6.40 - 7
மூன்றாம் பகுதி: இரவு 7 - 9
இதுவரை நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டிகள்
1. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து: 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
2. பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் அணி: 56 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
3. ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா: 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
4. ஆஸ்திரேலியா - பாகிஸ்தான்: 39 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டியை அடுத்து அக்டோபர் மாதம் துபாயில் பாகிஸ்தானும் இலங்கையும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன. டிசம்பரில் அடிலெய்டில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதையடுத்து அடுத்த வருடம் மார்ச் மாதம் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஆக 7 டெஸ்ட் அணிகள் அக்டோபர் மாதத்துக்குள் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றுவிடும். முக்கிய டெஸ்ட் அணிகளில் இந்தியா மட்டுமே இன்னமும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளாமல் உள்ளது. அதுகுறித்த திட்டமும் பிசிசிஐயிடம் இல்லை. இளஞ்சிவப்பு நிற பந்து உள்ளிட்ட சில நடைமுறைச் சிக்கல்களை முன்வைத்து இதுவரை பிசிசிஐ பகலிரவு டெஸ்ட் போட்டிகளைத் தவிர்த்தே வருகிறது. கடந்த ஹோம் சீசனிலும் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த பிசிசிஐ மறுத்துவிட்டது. எனினும் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. அப்போது தனது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.