இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், பல்லகெலேவில் 3-ஆவது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
மேலும், டெஸ்ட் தொடர் ஆரம்பித்து தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் இலங்கை, இதில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கபுகேதரா, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக லாஹிரு திரிமன்னே 80 ரன்கள் சேர்த்தார். தினேஷ் சன்டிமல் 36 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய பும்ரா, 10 ஓவர்களில் 2 மெய்டன் உட்பட 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதன்மூலம் சர்வதேசப் போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, முதன்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்தார்.