உலக குத்துச்சண்டை போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் குத்துச்சண்டை ஜாம்பவான் ஃப்ளாய்ட் மேய்வெதர் மற்றும் யூஎஃப்ஸி நட்சத்திர வீரர் கானர் மெக்ரேகார் மோதினர்.
10 சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டி முடிவதற்கு 1:55 நிமிடங்கள் மட்டுமே எஞ்சிய நிலையில், ஃப்ளாய்ட் மேய்வெதர் வெற்றிபெற்று புதிய வரலாற்றுச் சாதனைப் படைத்தார்.
பரபரப்பான இந்தப் போட்டியில் 9 சுற்றுகள் வரை இருவரும் சரிசம பலத்துடன் குத்துகளை விட்டனர். ஆனால், 10-ஆவது சுற்றில் ஆட்டம் திருப்புமுனை கண்டது. அதுவரை தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தி வந்த மேய்வெதர், 10-ஆவது சுற்றில் ஆக்ரோஷமாக விளையாடினார்.
இதனால், மெக்ரேகார் முகம் முழுவதும் ரத்தம் கசிந்தது. அவரால் மேற்கொண்டு செயல்பட முடியாமல் தள்ளாடினார். போட்டி முடிய இன்னும் 1:55 நிமிடங்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில், ஆட்டத்தை முடிப்பதாக நடுவர் அறிவித்தார்.
மேலும், எதிரியை டெக்னிகல் நாக்-அவுட் முறையில் வீழ்த்தியதாகக் கூறி ஃப்ளாய்ட் மேய்வெதர் வெற்றிபெற்றதாக அறிவித்தார். இந்த வெற்றியின் மூலம் 50-0 என்ற கணக்கில் தோல்வியே காணாமல் புதிய வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மேய்வெதர்.
முன்னதாக 49-0 என்ற கணக்கில் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் ராக்கி மார்ஸியானோவுடன் சாதனையைப் பகிர்ந்திருந்தார். இது குத்துச்சண்டை வரலாற்றில் நடத்தப்பட்ட புதிய சாதனையாகும்.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் 1.5 கிலே 24 காரட் தங்கம், 3,360 வைரக்கற்கள், 600 நீலக்கற்கள் மற்றும் 160 மரகதக்கற்களால் முதலைத் தோலில் வடிவமைக்கப்பட்ட பெல்ட் ஃப்ளாய்ட் மேய்வெதருக்கு பரிசாக அளிக்கப்பட்டது.
இந்த வெற்றி குறித்து ஃப்ளாய்ட் மேய்வெதர் கூறியாதவது:
இதுவரை நான் சந்தித்த போட்டியாளர்களிலேயே கானர் மிகவும் சிறந்தவர். நான் நினைத்ததை விட அவர் சிறப்பாக விளையாடினார். புதுமையான பல யுத்திகளை பயன்படுத்தினார். ஆனால் இறுதியில் நான் சிறந்தவன் என்பதை நிரூபித்துவிட்டேன். குத்துச்சண்டை ரசிகர்களுக்கு இந்தப் போட்டி நிச்சயம் சிறந்த விருந்தாக அமைந்திருக்கும். நான் முன்பு கூறியது போலவே எனது ஓய்வு முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. எனது கடைசி போட்டி இத்தனை சிறப்பாக அமையும் என்று நான் நினைக்கவில்லை என்றார்.
இந்தப் போட்டி குறித்து கானர் மெக்ரேகார் கூறியதாவது:
வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்றிருப்பது சற்று வருத்தமளிக்கிறது. கடைசி கட்டத்தில் நான் சற்று தோய்வடைந்துவிட்டேன். ஆனால், மேய்வெதர் சிறப்பாக செயல்பட்டார். அவர் ஒரு சாம்பியன் என்பதை நிரூபித்துவிட்டார். அவரது ஆட்டம் அத்தனை தனிச்சிறப்புடன் விளங்கியது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற அவர்தான் தகுதியானவர். என்னால் மறுபடி ஒரு போட்டியில் விளையாட முடியுமா என்று தெரியவில்லை. மேய்வெதருக்கு வாழ்த்துக்கள் என்றார்.