இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளிலும் வென்று 3-0 என இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
இந்த ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு மிகச்சிறப்பாக அமைந்தது. ஒருநாள் தொடர்களில் சிறிய அளவிலான இலக்குகளை அடைவதில் எப்போதுமே சிக்கல் இருக்கும். அதனை சரியான முறையில் நாங்கள் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது.
சில சமயங்களில் தவறுகள் நடைபெறுவது சாதாரணம். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆடுகளங்களும் சற்று சவாலானதாக இருக்கிறது.
எனவே இளம் வீரர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள சிறிது காலம் தேவைப்படும். அதுவரை பொறுமையாக இருப்பது அவசியம். வீரர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
இது எப்போதும் தொடர வேண்டும். குறிப்பாக இந்த தொடரில் இதுவரை 11 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா அபாரமாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு வாழ்த்துகள்.
இந்த ஒருநாள் போட்டித் தொடருக்கான அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே அடுத்து வரும் 2 போட்டிகளிலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
அப்போதுதான் அனைவரும் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை அறிய முடியும். தொடரை வென்ற நிலையில், புதிதாக களமிறங்கும் வீரர்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். அவர்கள் தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அது சிறந்த வாய்ப்பாக அமையும் என்று கருதுகிறேன் என்றார்.