ஒடிஷாவுக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் 17 வயது பிருத்வி ஷா சதமடித்து அசத்தியுள்ளார்.
புவனேஸ்வரில் இன்று தொடங்கிய மும்பை - ஒடிஷா அணிகளுக்கு இடையிலான ரஞ்சிப் போட்டியில் டாஸ் வென்ற ஒடிஷா, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய பிருத்வி ஷா, இன்றும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 153 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவருடைய மூன்றாவது ரஞ்சி சதமாகும்.
இதுவரை விளையாடிய ஐந்து முதல்தர போட்டிகளில் 4 சதங்கள் எடுத்துள்ளார் பிருத்வி ஷா. 18 வயதுக்கு முன்பு சச்சின் 7 முதல்தர சதங்கள் எடுத்துள்ளார். அதற்கு அடுத்ததாக அதிக சதங்கள் எடுத்துள்ளார் பிருத்வி ஷா.
விளையாடுகிற ஒவ்வொரு போட்டியிலும் முத்திரை பதிக்கும் பிருத்வி ஷா, விரைவில் (நவம்பர் 9) 18 வயதை எட்டவுள்ளார். இளம் வயதிலேயே முதல்தர கிரிக்கெட்டில் தன் திறமையை வெளிப்படுத்தி வருவதால் விரைவில் இந்திய அணியில் விளையாடுவார் என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
18 வயதுக்கு முன்பு முதல்தர கிரிக்கெட் போட்டியில் அதிக சதங்கள்:
7 - சச்சின் டெண்டுல்கர்
4 - அம்பட்டி ராயுடு / பிருத்வி ஷா
3 - அங்கித் பாவ்னே
18 வயதுக்கு முன்பு ரஞ்சிப் போட்டியில் அதிக சதங்கள்:
3* - பிருத்வி ஷா
3 - அம்பட்டி ராயுடு
3 - அங்கித் பாவ்னே
18 வயதுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 7 முதல் தர சதங்களை அடித்திருந்தாலும் அவற்றில் 2 மட்டுமே ரஞ்சிப் போட்டியில் எடுத்த சதங்கள்.