மும்பை செல்வதற்காக தனியார் விமானத்தில் பயணம் செய்த பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, விமான நிறுவன ஊழியர் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
ட்விட்டர் தளத்தில் சிந்து தெரிவித்ததாவது: இதைச் சொல்வதற்காக என்னை மன்னிக்கவும். எனக்கு மோசமான அனுபவம் நடந்துள்ளது. மும்பை செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது (6E608), அஜீதேஷ் என்கிற விமான ஊழியர் என்னிடம் மிக மோசமாக நடந்துகொண்டார். விமான சிப்பந்தி ஆஷிமா, அவர் பயணிகளிடம் (என்னிடம்) ஒழுங்காக நடந்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தியபோதும் அவரிடமும் மோசமாக நடந்துகொண்டார். இதுபோன்ற ஊழியர்கள் இண்டிகோ போன்ற நம்பிக்கையான நிறுவனத்தில் பணிபுரிந்தால் அந்நிறுவனத்தின் மீதான மதிப்பைச் சீரழித்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து இண்டிகோ நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கூடுதல் எடை கொண்ட பையை விமானத்தினுள் சிந்து கொண்டுவந்தார். இது தவறு. இந்த விதிமுறையை எல்லாப் பயணிகளிடத்திலும் கடைப்பிடிக்கிறோம். பயணிகளின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். இதுதொடர்பான உரையாடலில் எங்கள் ஊழியர்கள் நிதானமாகவே நடந்துகொண்டார்கள். சிந்துவின் மேலாளரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தபிறகு அந்தப் பையை விமானத்திலிருந்து சரக்குப் பகுதிக்குக் கொண்டுசென்றோம். பிறகு பயணத்தின் முடிவில் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. சிந்துவின் சாதனைகளில் நாங்கள் பெருமைகொள்கிறோம். அதேசமயம் பாதுகாப்புச் செயல்பாடுகளும் எங்களுக்கு முக்கியம். எங்கள் ஊழியர் அவர் பணியைத்தான் செய்தார். இதை சிந்து வரவேற்பார் என நம்பிக்கை கொள்கிறோம் எனப் பதில் அளித்துள்ளது.