இலங்கை டெஸ்ட் தொடர்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு! 

நவம்பர் 16 முதல் 20-ம் தேதி வரையில் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது...
இலங்கை டெஸ்ட் தொடர்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு! 

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், பாண்டியா இடம்பெற்றிருந்தார். ஆனால், தொடர்ச்சியாக விளையாடுவதாலும் மேலும் அடுத்ததாக முக்கியமான தொடர்களில் பங்கேற்கவுள்ளதாலும் பாண்டியாவுக்கு டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பதிலாக, பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் பாண்டியா பயிற்சிகளை மேற்கொள்வார் என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியா-இலங்கை இடையேயான 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள், 3 ஒருநாள் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 16 முதல் 20-ம் தேதி வரையில் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. 2-வது டெஸ்ட் கிரிக்கெட் நவம்பர் 24 முதல் 28-ம் தேதி வரை நாகபுரியிலும், 3-வது டெஸ்ட் கிரிக்கெட் டிசம்பர் 2 முதல் 6-ம் தேதி வரை தில்லியிலும் நடைபெறவுள்ளன.

முன்னதாக, கடந்த ஜூலையில் இந்தியா வந்த இலங்கை அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் இலங்கை அணி ஒயிட்வாஷ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி: விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், ஷிகர் தவன், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ரித்திமான் சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com