பயிற்சி ஆட்டம்: இலங்கை அணி 411 ரன்கள் குவிப்பு!

பிசிசிஐ தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 411 ரன்கள் குவித்துள்ளது...
பயிற்சி ஆட்டம்: இலங்கை அணி 411 ரன்கள் குவிப்பு!

பிசிசிஐ தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 411 ரன்கள் குவித்துள்ளது.

பிசிசிஐ தலைவர் லெவன் - இலங்கை அணிகள் இடையேயான பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் இன்று தொடங்கியுள்ளது. ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாக மைதானத்தில் இந்த ஆட்ட நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் தலைமையிலான பிசிசிஐ தலைவர் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

தொடக்க வீரர்களான சதீரா சமரவிக்ரமாவும் திமுத் கருணாரத்னேவும் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். சமரவிக்ரமா 74 ரன்களில் ஆட்டமிழந்தார். கருணாரத்னே 50 ரன்களில் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். லாஹிரு திரிமானி 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி 44-வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. 

இதன்பின்னர் ஏஞ்ஜெலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் அரை சதமெடுத்தார்கள். தில்ருவன் பெரேரா 48 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

இந்தியா-இலங்கை இடையேயான 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள், 3 ஒருநாள் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது.

நவம்பர் 16 முதல் 20-ம் தேதி வரையில் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. 2-வது டெஸ்ட் கிரிக்கெட் நவம்பர் 24 முதல் 28-ம் தேதி வரை நாகபுரியிலும், 3-வது டெஸ்ட் கிரிக்கெட் டிசம்பர் 2 முதல் 6-ம் தேதி வரை தில்லியிலும் நடைபெறவுள்ளன.

முன்னதாக, கடந்த ஜூலையில் இந்தியா வந்த இலங்கை அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் இலங்கை அணி ஒயிட்வாஷ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com