இத்தாலியில் நடைபெற்று வரும் U-20 அளவிலான உலக ஜூனியர் செஸ் போட்டியில் நான்காவது சுற்றின் முடிவில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தாவும் கார்த்திகேயன் முரளியும் இரண்டாமிடம் வகிக்கிறார்கள்.
கிராண்ட் மாஸ்டரான கார்த்திகேயன் முரளி, இத்தாலியைச் சேர்ந்த லுகா மொரோனியைத் தோற்கடித்தார். சர்வதேச செஸ் மாஸ்டரான பிரக்ஞானந்தா, கிராண்ட் மாஸ்டர் ஜார்டன் வான் ஃபாரஸ்டைத் தோற்கடித்து கவனம் ஈர்த்தார்.
நான்காவது சுற்றுகளின் முடிவில் 3.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா, கார்த்திகேயன் முரளி உள்ளிட்ட 7 பேர் இரண்டாமிடம் வகிக்கிறார்கள். இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ரஷ்யாவைச் சேர்ந்த கிரிலி, அலெக்சே ஆகிய இரு வீரர்கள் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்கள்.
மகளிர் ஜூனியர் செஸ் போட்டியில் இந்திய வீராங்கனையான அகான்க்ஷா மூன்று புள்ளிகளுடன் மூன்றாமிடம் வகிக்கிறார். பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி 2.5 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.
இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 62 நாடுகளிலிருந்து 148 வீரர்களும் மகளிர் பிரிவில் 48 நாடுகளிலிருந்து 89 வீராங்கனைகளும் கலந்துகொண்டுள்ளார்கள். 11 சுற்றுகளின் முடிவில் நவம்பர் 25 அன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றியாளர்களுக்குக் கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் (1.91 லட்சம்) பரிசுத்தொகை வழங்கப்படும்.