9-வது சுற்றை டிரா செய்த 12 வயது பிரக்ஞானந்தா: உலக சாதனையை நெருங்குவதால் பரபரப்பு!

தற்போது 7 புள்ளிகள் கொண்டுள்ள பிரக்ஞானந்தா இவர்கள் மூவரையும் தாண்டிச் சென்று சாம்பியன் ஆகவேண்டுமென்றால் கடைசி இரு சுற்றுகளையும்...
9-வது சுற்றை டிரா செய்த 12 வயது பிரக்ஞானந்தா: உலக சாதனையை நெருங்குவதால் பரபரப்பு!

உலக ஜூனியர் செஸ் போட்டியில் தனது 9-வது சுற்றை டிரா செய்துள்ளார் 12 வயது தமிழக வீரரான பிரக்ஞானந்தா. இதையடுத்து 7 புள்ளிகளுடன் அவர் 2-ம் இடத்தில் உள்ளார்.

இத்தாலியின் டிரவிசியோவில் நடைபெற்று வரும் U-20 அளவிலான உலக ஜூனியர் செஸ் போட்டியில் 9-வது சுற்றில் முதல் இடத்திலிருக்கும் டரி ஆர்யனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து 7.5 புள்ளிகளுடன் டரி ஆர்யன் முதலிடத்திலும் 7 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்திலும் உள்ளார்கள். 

இன்னும் இரு சுற்றுகளே மீதமுள்ள நிலையில்அவ்விரண்டையும் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. அப்படி நிகழும் பட்சத்தில் பிரக்ஞானந்தா இப்போட்டியை வெல்வதோடு மட்டுமல்லாமல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் பெறுவார். கடைசிக்கு முந்தைய சுற்றான 10-வது சுற்றில் 6.5 புள்ளிகள் கொண்டுள்ள லோமசோவ் செமெனை எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா.

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெறுவதற்கான முதல் நார்ம் என்ற தகுதியைப் பெற்றுள்ளார். இதையடுத்து அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றுவிட்டால் உலக சாதனை படைக்க வாய்ப்புண்டு. டரி ஆர்யன், கிரில் என இரு வீரர்கள் 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்கள். மேலும் சீன வீரர் ஜியாங்கும் 7 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். தற்போது 7 புள்ளிகள் கொண்டுள்ள பிரக்ஞானந்தா இவர்கள் மூவரையும் தாண்டிச் சென்று சாம்பியன் ஆகவேண்டுமென்றால் கடைசி இரு சுற்றுகளையும் வென்றால் மட்டுமே சாத்தியமாகும். இல்லாவிட்டால் மற்றவர்களின் வெற்றி, தோல்வியை முன்வைத்தே பிரக்ஞானந்தாவின் வெற்றி உறுதி செய்யப்படும். 

2002-ல், உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின், 12 வயதில் (12 வருடம் 7 மாதங்களில்) கிராண்ட் மாஸ்டராகி, இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையைச் செய்தார். இன்றுவரை அவர் சாதனையை யாராலும் தாண்டமுடியவில்லை. அடுத்த இளம் கிராண்ட் மாஸ்டர் - இந்தியாவின் நெகி, 13 வருடம், 4 மாதம் 22 நாள்கள். மூன்றாம் இளம் கிராண்ட் மாஸ்டர் - மேக்னஸ் கார்ல்சன். 13 வருடம், 4 மாதம் 27 நாள்கள். 

பிரக்ஞானந்தா, 10 வயதில் (10 வருடம் 9 மாதங்களில்) சர்வதேச மாஸ்டராகி சாதனை செய்தார். 2005-ம் வருடம் ஆகஸ்ட் 10-ம் தேதி பிறந்த பிரக்ஞானந்தா, உலக ஜூனியர் செஸ் போட்டியை வென்று, செஸ் கிராண்ட் மாஸ்டரானால் (12 வருடம் 3 மாதங்களில்), உலக சாதனை செய்ய வாய்ப்புண்டு. 

இந்தியாவில் இதுவரை 48 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளார்கள். அவர்களில் 16 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டிலிருந்து இன்னொரு கிராண்ட் மாஸ்டர் கிடைப்பாரா என்பது வருகிற சனியன்று தெரிந்துவிடும்.

மகளிர் உலக ஜூனியர் செஸ் போட்டியில் இந்தியாவின் அகான்க்‌ஷா, 9 சுற்றுகளின் முடிவில் 6 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளார்கள். பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி 5.5 புள்ளிகளுடன் 5-ம் இடத்தைப் பிடித்துள்ளார். 

உலக ஜூனியர் செஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் 62 நாடுகளிலிருந்து 148 வீரர்களும் மகளிர் பிரிவில் 48 நாடுகளிலிருந்து 89 வீராங்கனைகளும் கலந்துகொண்டுள்ளார்கள். 11 சுற்றுகளின் முடிவில் நவம்பர் 25 அன்று இரு பிரிவிலும் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றியாளர்களுக்குக் கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் (1.91 லட்சம்) பரிசுத்தொகை வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com