இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமன் சாஹாவுக்குத் தோள்பட்டைக் காயத்துக்கான அறுவை சிகிச்சை இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.
33 வயதான மேற்குவங்க விக்கெட் கீப்பரான சாஹாவுக்குத் தோளில் காயம் ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகும் நிலைமை மோசமடைந்தது. இதனால் அவரால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க முடியவில்லை.
இந்நிலையில் மான்செஸ்டரிலிருந்து கொல்கத்தாவுக்குத் திரும்பியுள்ளார் சாஹா. அவர் கூறியதாவது:
இது சுலபமில்லை. மூன்று வாரங்களுக்கு என்னால் கையை நகர்த்தமுடியாது. அதை ஒரு நிலையில் வைக்கமுடியாது. வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதை விடவும் இது கடினமானது. ஆனால் இதை நான் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அப்போதுதான் என்னால் மீண்டும் ஆடுகளத்தில் களமிறங்க முடியும்.
டிசம்பரில்தான் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது. அதுவரைக்கும் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் காயம் ஏற்படுவதும் ஒரு பகுதிதான். இதை யாரும் தடுக்கமுடியாது. ஆனால் காயத்துடன் விளையாட்டில் ஈடுபடக்கூடாது.
வேகவேகமாகக் காயத்திலிருந்து மீளவேண்டும் என்று நான் எண்ணவில்லை. காயம் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதில்தான் நான் கவனமாக உள்ளேன் என்று கூறியுள்ளேன்.