4-ஆம் நாளில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஹாரிஸ் 70 ரன்கள் சேர்த்தனர். இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 123 ரன்கள் குவித்தார். நாதன் லயன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
43 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா 72 ரன்கள் சேர்த்தார். முகமது ஷமி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், 287 என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸில் களமிறங்கி இந்திய அணி தடுமாறி வருகிறது. 55 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ராகுல் 0, முரளி விஜய் 20, புஜாரா 4, விராட் கோலி 17, ரஹானே 30 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். ஹாசில்வுட், லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்துள்ளது. விஹாரி 24, ரிஷப் பந்த் 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர். கடைசி நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இப்போட்டியில் இந்தியா வெற்றிபெற 175 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் கை ஓங்கியுள்ளது.