ஆஸி. கேப்டன் டிம் பெயினைத் தற்காலிக கேப்டன் என ரிஷப் பந்த் சீண்டியதையடுத்து கள நடுவரிடம் அவர் விளக்கம் அளிக்கவேண்டிய நிலைமை உருவானது.
நேற்று இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்தபோது விக்கெட் கீப்பராக உள்ள ஆஸி. கேப்டன் டிம் பெயின், இந்திய வீரர்களை அடிக்கடிக் கிண்டலடித்துச் சீண்டிக்கொண்டே இருந்தார். அதுவும் ரிஷப் பந்த் பேட்டிங் செய்தபோது பெயினின் கிண்டல் அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில் இன்று டிம் பெயின் பேட்டிங் செய்தபோது தன்னுடைய வேலையைக் காண்பித்தார் ரிஷப் பந்த்.
இங்கே கெஸ்ட் ஒருவர் வந்திருக்கிறார். தற்காலிக கேப்டன். பேச மிகவும் விருப்பப்படுவார். பேச்சு... பேச்சு... அது மட்டும்தான் தெரியும். அவரை ஆட்டமிழக்க எதுவும் செய்யவேண்டாம் என்று டிம் பெயினை நக்கலடித்துப் பேசினார். குறிப்பிட்ட ஓவர் முடிந்தபிறகு கள நடுவர் இயன் குட், ரிஷப் பந்தை அழைத்து இந்தக் கிண்டல் குறித்து பேசினார். தற்காலிக கேப்டன் என எதிரணி கேப்டனைக் கிண்டல் செய்வதை அவர் கேள்வியெழுப்பியதாகத் தெரிகிறது. ரிஷப் பந்தும் தன் விளக்கத்தை நடுவரிடம் கூறினார். கடைசியில் பெயின் 26 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.