2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள 11-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதில், சரியாக தங்கள் முதல் போட்டியில் எதிர் எதிர் அணிகளில் விளையாடும் இரு ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களின் சொந்த காரணங்களுக்காக தவறவிடுகின்றனர்.
நடப்பு சீசனின் 2-ஆம் நாளான ஏப்ரல் 8-ந் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் பஞ்சாப் அணிக்காக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச் மற்றும் டெல்லி அணிக்காக நட்சத்திர ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஏப்ரல் 7-ந் தேதி ஆரோன் பிஞ்ச் தனது நீண்டநாள் காதலி எமி க்ரிஃப்ஃபித்ஸை மணக்கிறார். இதற்காக கிளென் மேக்ஸ்வெல் மணமகன் தோழனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவரும் தங்களது அணிகளின் முதல் போட்டியை தவறவிடுகின்றனர். இருப்பினும் அடுத்த போட்டி முதல் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:
ஐபிஎல் அட்டவணை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இருப்பினும் எனது திருமணத்தை தள்ளி வைக்க முடியாது. எனவே நாங்கள் இருவரும் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை.
இருப்பினும் அடுத்த 3 ஆண்டுகள் பஞ்சாப் அணியுடன் நான் விளையாடவுள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பிராட் ஹாக் எனக்கு மிகச்சிறந்த நண்பன். அவனுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன். இருப்பினும் ஐபிஎல் காரணமாக எனது நண்பர்களான வார்னர் உள்ளிட்டோர் எனது திருமணத்தில் பங்கேற்பது சந்தேகம்தான் என்றார்.