ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த 9 ஆண்டுகளாக விளையாடிய ரொனால்டோ, இத்தாலியின் முன்னணி கிளப்பான ஜுவென்டஸ் அணியில் இணைந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக கால்பந்து உலகில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஐரோப்பிய கால்பந்து லீக் போட்டிகளிலும் புகழ் பெற்றுள்ளார். அதே நேரத்தில் தேசிய அணிக்காக பெரிய அளவிலான போட்டியில் ஜொலிக்கவில்லை. இந்த வருட உலகக் கோப்பைப் போட்டியின் நாக் அவுட் சுற்றில் போர்ச்சுகல் அணி வெளியேற்றப்பட்டுள்ளது. பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவேயிடம் வீழ்ந்து வெளியேறியது போர்ச்சுகல். 33 வயதான ரொனால்டோ சிறப்பாக விளையாடினாலும் நாட்டுக்காக பெரிய வெற்றியை குவிக்க முடியவில்லை.
இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் அணி வீரராக அறியப்பட்ட ரொனால்டோ, தற்போது இத்தாலியின் முன்னணி கிளப்பான ஜுவென்டஸ் அணிக்கு மாறியுள்ளார். ஜுவென்டஸ் அணி கடந்த நான்கு வருடங்களில் இருமுறை சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது. இருமுறையும் அந்த அணி 2-ம் இடமே பிடித்தது.
ரியல் மாட்ரிக் அணிக்காக 438 ஆட்டங்களில் விளையாடிய ரொனால்டோ, 451 கோல்களை அடித்துள்ளார். 16 கோப்பைகளை வெல்ல உதவியுள்ளார். இந்நிலையில் நான்கு வருட ஒப்பந்தமாக ரூ. 849 கோடிக்கு (123.24 மில்லியன் டாலர்) ரொனால்டோ, ஜுவென்டஸ் அணிக்கு மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.