போலி பட்டச் சான்றிதழ் சமர்ப்பித்ததின் எதிரொலியாக இந்திய டி 20 மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் டிஎஸ்பி பணியில் இருந்து சாதாரண காவலராக பதவி இறக்கம் செய்யப்படவுள்ளார்.
மகளிர் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியதற்காக ஹர்மன்பிரீத் கெளருக்கு பஞ்சாப் காவல்துறை டிஎஸ்பி பதவி வழங்கி சிறப்பித்தது. பணி விதிகளின்படி பட்டதாரியே டிஎஸ்பி பதவியை வகிக்க முடியும். மீரட் செளத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் இருந்து அவர் பெற்றதாக சமர்ப்பித்த பட்டச் சான்று போலி என ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து அவர் டிஎஸ்பி பதவியில் இருந்து கான்ஸ்டபிள் பணிக்கு இறக்கம் செய்யப்படுவார் என பஞ்சாப் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் +2 சான்றிதழைச் சமர்ப்பித்துள்ளதால் அதன் அடிப்படையில் இந்தப் பணி வழங்கப்படவுள்ளது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக அவர்மீது வழக்கு எதுவும் தொடரப்படாது என்றும் கூறப்படுகிறது.
டிஎஸ்பி பதவிக்குப் பதிலாக கான்ஸ்டபிளாகப் பணியாற்ற ஹர்மன்பிரீத் கெளர் சம்மதித்தால் அவர் பஞ்சாப் காவல்துறையில் தொடர்ந்து பணியாற்றமுடியும். இந்நிலையில் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்காகத் தயாராகி வரும் கெளர், இந்த சர்ச்சை குறித்து கேட்டதற்கு, இதுகுறித்துத் தனக்கு ஒன்றும் தெரியாது என்று பதில் அளித்துள்ளார்.