டெஸ்ட்: தவனைத் தொடர்ந்து சதம் அடித்த முரளி விஜய்! வலுவான நிலையில் இந்தியா!

முரளி விஜய் 143 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார்... 
டெஸ்ட்: தவனைத் தொடர்ந்து சதம் அடித்த முரளி விஜய்! வலுவான நிலையில் இந்தியா!

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று தொடங்கியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் சைனி, குல்தீப் யாதவ், கருண் நாயர், தாக்குர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்களான விஜய், தவன், ராகுல் ஆகிய மூவருமே இந்த ஆட்டத்தில் விளையாடுகிறார்கள்.

இன்று ஷிகர் தவன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 47 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார். டி20 ஆட்டங்களில் ரன்கள் அதிகம் கொடுக்காமல் பந்துவீசும் ரஷித் கான், டெஸ்ட் போட்டியில் மிகவும் தடுமாறினார். முக்கியமாக ஷிகர் தவன், ரஷித் கானின் பந்துவீச்சைக் குறிவைத்துத் தாக்கினார். சிக்ஸரும் பவுண்டரிகளுமாக அடித்து வந்த ஷிகர் தவன், 87 பந்துகளில் சதத்தை எட்டினார். இதனால் முதல் நாளின் முதல் பகுதியில் உணவு இடைவேளைக்கு முன்பு சதமெடுத்த ஆறாவது வீரர், முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார். உணவு இடைவேளைக்குப் பிறகு யாமின் பந்துவீச்சில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் தவன்.

மூன்றாவதாகக் களமிறங்கினார் ராகுல். தவன் ஆட்டமிழந்த பிறகு முரளி விஜய் விரைவாக ரன்கள் எடுக்க ஆரம்பித்தார். 80 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் முரளி விஜய் (7 x 4, 1 x 6). 36.3 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எடுத்தது. தவனுக்குப் பிறகு விஜய்யும் ரஷித் கான் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார். அவர் வீசிய 10-வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்தார் விஜய். அந்தச் சமயத்தில் 10 ஓவர்களில் 75 ரன்கள் கொடுத்திருந்தார் ரஷித் கான். நிதானமாக ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல், 38-வது ஓவரில் முஜீப்பின் ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்தார். 

45.1 ஓவர்களில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் தேநீர் இடைவேளையை முன்கூட்டியே அறிவித்தார்கள் நடுவர்கள்.

முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. விஜய் 94, லோகேஷ் ராகுல் 33 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

மழை நின்று ஆட்டம் தொடங்கியவுடன், முரளி விஜய் 143 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய 12-வது டெஸ்ட் சதமாகும். இதன்பிறகு ராகுலும் 61 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார்.

சதமடித்த சில நிமிடங்களில் 105 ரன்களில் ஆட்டமிழந்தார் முரளி விஜய். இந்திய அணி 52 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com