இங்கிலாந்துக்கு எதிரான இறுதிச்சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி முத்தரப்பு டி20 போட்டியின் சாம்பியன் ஆகியுள்ளது.
முத்தரப்பு மகளிர் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மும்பையில் இன்று போட்டியிட்டன.
கடந்த 22-ம் தேதி முதல் டி20 ஆட்டங்கள் மகாராஷ்டிர மாநிலம்,
மும்பையில் நடைபெற்று வருகின்றன. இதில், இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறவில்லை.
இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி, முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பிறகு அந்த அணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. கேப்டன் லேனிங், 45 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வில்லானி 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது.
கடினமான இலக்கை எதிர்கொண்ட இங்கிலாந்து மகளிர் அணி ஆரம்பத்திலிருந்து மிகவும் தடுமாறியது. சிவர் மட்டும் நன்றாக விளையாடி அரை சதமெடுத்தார். முன்வரிசை வீராங்கனைகளில் இருவர் ரன் எதுவும் எடுக்காததால் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டும்தான் எடுக்க முடிந்தது. இதனால் 57 ரன்கள் வித்தியாசத்தில் இறுதி ஆட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி, முத்தரப்புப் போட்டியின் சாம்பியன் ஆகியுள்ளது. லேனிங் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனை பட்டத்தையும் மேகன் ஷட், போட்டியின் சிறந்த வீராங்கனை பட்டத்தையும் வென்றார்கள்.