ஐபிஎல்-இன் நேற்றைய (செவ்வாய்கிழமை) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் குல்தீப் யாதவ் சுழல் ஜாலத்தைக் காட்டி 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருடைய இந்த பந்துவீச்சு கொல்கத்தா அணிக்கு முக்கியமான வெற்றியை பெற்றுத் தந்தது.
நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை பெரிதளவு சோபிக்காத அவர் நேற்றைய போட்டியில் எழுச்சி பெற்றார்.
இந்த வெற்றிக்குப் பிறகு குல்தீப் யாதவ் பேசுகையில்,
"நான் வார்னேவின் மிகப் பெரிய ரசிகன். அவர் தான் என்னுடைய முன்மாதிரி. அவர் முன்பு விளையாடும் போது எப்போதும் வித்தியாசமான ஊக்கம் ஒன்று கிடைக்கும். அவர் முன்பு நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
போட்டி முடிந்த பிறகு அவருடன் உரையாடினேன். இங்கிலாந்து தொடருக்கான திட்டங்களை ஏற்கனவே தொடங்கிவிட்டேன். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு அவருடன் மீண்டும் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணுகிறேன்.
ரன்களை கட்டுப்படுத்தும் தடுப்பாட்ட மனநிலைக்கு நான் மாறிவிட்டேன். ஆனால், நான் ரன்களை கட்டுப்படுத்தும் பந்துவீச்சாளர் அல்ல. பேட்ஸ்மேனிடம் தாக்குதல் பந்துவீச்சை வெளிப்படுத்தி நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறேன். எனது பலமே விக்கெட்டுகளை வீழ்த்துவது தான்.
நேற்றைய போட்டியில் பட்லர் 10 ஓவர்கள் கூடுதலாக பேட்டிங் செய்திருந்தால் அந்த அணி 170-180 ரன்களை குவித்திருக்கும். அனைத்தும் எனது திட்டத்தின்படியே சென்றது. அதனால், நேற்று நான் வீழ்த்திய 4 விக்கெட்டுகளில் பட்லர் விக்கெட் தான் சிறந்த விக்கெட்.
நாங்கள் ஹைதராபாத் அணியுடனான அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டும். அது மிக முக்கியமான வெற்றி. அதில் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகும்" என்றார்.