மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தனது சுட்டுரை பக்கத்தில் தற்போது வெளியிட்டது.
அதன்படி,
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, கலீல் அகமது மற்றும் யுஸ்வேந்திர சாஹல்.
இதில், தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்பை ரோஹித் மற்றும் தவான் தக்கவைத்துக்கொண்டனர். கோலியின் 3-ஆவது இடத்தை ராகுல் நிரப்பவுள்ளார். நடுகள பேட்ஸ்மேன்களாக பந்த், பாண்டே மற்றும் கார்த்திக் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. விக்கெட் கீப்பர் பொறுப்பை கார்த்திக்கை பின்னுக்குத் தள்ளி ரிஷப் பந்த் கைப்பற்றியுள்ளார்.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற கூட்டணியில் களமிறங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் பும்ரா, புவனேஷ்வர், கலீல் அகமது ஆகிய மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுமே விளையாடும் லெவனில் இடம்பெறுவார்கள். சுழற்பந்துவீச்சை பொறுத்தவரை குல்தீப் யாதவுடன் ஆல்-ரௌண்டர் திறன் கொண்ட அறிமுக வீரர் குருணால் பாண்டியா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச விளையாடும் லெவன் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, ஜஸ்பிரீத் பும்ரா.