ஆசிய ஏர்கன் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் 16 வயதே ஆன வீரர் செளரவ் சௌதரி.
குவைத்சிட்டியில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை ஜூனியர் ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் 239.8 புள்ளிகளுடன் தங்கம் வென்றார் செளரவ். அதே பிரிவில் அர்ஜுன் 237.7 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார்.
அதே நேரத்தில் அர்ஜுன் சிங், அன்மோல் ஜெயின் ஆகியோருடன் இணைந்து செளரவ் அணிகள் பிரிவில் 1731 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். நிகழாண்டில் செளரவ் வெல்லும் 4-ஆவது தங்கம் இதுவாகும். ஏற்கெனவே ஜகார்த்தா ஆசியப் போட்டி, யூத் ஒலிம்பிக் போட்டி, உலக துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் தங்கம் வென்றார் செளரவ்.
வியாழக்கிழமை நிலவரப்படி 3 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலத்துடன் 10 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.