இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் வரும் 4-ம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் 12-ம் தேதி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளன. ஆசியக் கோப்பை போட்டி ஓய்வுக்கு பின் மீண்டும் அணியில் இணைந்துள்ளார் கேப்டன் விராட் கோலி.
நாளை விளையாடவுள்ள இந்திய அணியின் 12 பேர் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொடக்க வீரர்களாக ராகுலும் பிருத்வி ஷாவும் விளையாடவுள்ளார்கள். இதையடுத்து பிருத்வி ஷா டெஸ்ட் வீரராக அறிமுகமாகவுள்ளார். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் என மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதனால் ஷர்துல் தாக்குர் நாளை விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஒருவேளை இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களே போதும் என கோலி முடிவெடுத்தால் ஷர்துல் தாக்குர் நாளைய டெஸ்டில் விளையாட வாய்ப்புண்டு. மேலும், இங்கிலாந்தில் விளையாடிய விஹாரி, அணியில் இடம்பெறவில்லை.